திங்கள், 26 ஜூன், 2023

இயற்கைக்கு உயிரூட்டிய "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை"


 


"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" வெறும் வாசகம் மட்டுமல்ல. அறிவியலின் உண்மை. உலகின் ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, வானம், ஆகாயம் இவைகள் அத்தனையும் மனித உயிரோடும், உடலோடும்   சம்பந்தப்பட்டவைகள். மனித உயிர் மட்டும் தான் மதிப்பு மிகுந்ததா??? மனித உயிருக்குப் பிறகு தான் மற்ற உயிர்கள் எல்லாம் இது தான் மனித உயிரின் மதிப்பு? மனித உயிருக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் இருப்பதில்லை, ஏன் இந்த பாகுபாடு? சுயநலம் ஒருபுறம் இருக்க, விலங்குகளை காக்கவும் ஆங்காங்கே சங்கங்களும், சட்டங்களும் வந்துவிட்டன அதனால் மனித உயிரை அடுத்து விலங்குகளின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்பது அதனை அழிக்கும்போது தான் உணர்கிறோம். அதற்கும் வலி உண்டு, அதற்கும் இறப்பு உண்டு. மனிதன் அந்த தாவரத்தின் வலியும், இறப்பும் உணராததால் நமக்கு அது ஒரு வேடிக்கை. தாவரங்களும் உலகில் உள்ள ஐம்பூதங்களோடு சம்பந்தப்பட்டது தான். நிலத்தின் வேர் ஊன்றி, நீரினை உணவாக எடுத்து, ஆகாயத்தை எல்லையாகக் கொண்டு, காற்றினை உலகிற்கு கொடுத்து, சுட்டெரிக்கும் செஞ்சூரிய நெருப்பிலிருந்து சத்துக்களை ஈர்த்து வளர்கிறது. அதனால்தான் எத்தனை பலன்கள்!!

 மனிதன் உயிருடன் இருக்கும்போது மட்டுமே பயன்படுவான் இறந்தபின் பிணமாகத்தான் பார்க்கப்படுவான். ஆனால் தாவரமோ இருந்தாலும் பயன், இறந்தாலும் பயன் என்பதை உணர்ந்த பின்னும் மரங்களை அழிக்க நினைக்க காரணம் மனித இனத்தின் தேவை.

மனிதனின் தேவைக்கும் ஆசைக்கும் தான் எல்லை என்பதே கிடையாதே. மனித இனம் அதிகரிக்க அதிகரிக்க இருப்பதை அழித்து இடத்தை அபகரிப்பதே முன்னேற்றம் என்று கருதுகிறோம்.

அப்படி இன்றைய தேவைக்காக எத்தனை எத்தனை மரங்கள், தாவரங்கள், காடுகள், மலைகள் என்று இயற்கை வரங்களை அழிக்கிறார்கள் மனிதர்கள். நானும் மனிதன் தான் எனக்கும் இந்த பாவச்செயலில் பங்கு உண்டு ஆனாலும் அதனை காப்பது எப்படி? அடுத்த தலைமுறைக்கு செயற்கையை விட இயற்கையை உருவாக்குவது எப்படி என்று எண்ணுவது ஒரு சிலரே. அந்த சிலர் அந்த இயற்கை வளங்களை காப்பாற்ற போராடும் போராட்டம் அளவில்லாதது. எல்லா இடங்களிலும் அப்படி பட்ட சில மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இன்றும் நாம் சுவாசிக்க இயற்கை உதவுகிறது.
 

இன்றைய சுயநல உலகில் மனிதனுக்கே உதவாத சில மனிதர்களுக்கு மத்தியில் மரம் ஒன்றை காக்க பல மணி நேரம் போராடி உயிர் கொடுத்த மரத்திற்கு மறு உயிர் கொடுக்கும் சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 200 ஆண்டு பழமையான மரம், எத்தனை பேருக்கு நிழல் கொடுத்திருக்கும், எவ்வளவு காற்று கொடுத்திருக்கும் அப்பப்பா எத்தனை தலைமுறைக்கு தாயாக இருந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே கண்ணை சுற்றுகிறது. அப்படி பட்ட மரத்தை அழித்து நம் தேவைக்கு சாலை அமைக்க முற்பட்டவர்களுக்கு மத்தியில் அந்த மரத்தை  மற்றுமொரு இடத்தில் மறுநடவு செய்து உயிரூட்ட எண்ணி அதனை செய்தும் காட்டியவர்கள் தான் "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை" நண்பர்கள். மிகவும் அரிதான இந்த செயல்களை செய்பவர்கள் வெகு சிலரே. அவர்களில் குறிப்பிடக்கூடியவர்கள் தான்  "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை" அமைப்பினரும்.

"வாய்ச்சொல் எளிது
செயல் என்பது அவ்வளவு எளிதல்ல".

200 ஆண்டு பழமையான மரம், கிட்டத்தட்ட 40 டன் எடை ஓரிடத்திலுருந்து எடுத்து சென்று சில மைல் தாண்டி மற்றொரு இடத்தில் மறு நடவு செய்வது எளிதானதா?? அந்த கடினமான பணியை நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிகழ்த்தியுள்ளது. 

முன்னால் யார் செய்தார்கள், 

பின்னாளில் யார் செய்வார்கள் என்றெல்லாம் தெரியாது 

இந்நாள் நாங்கள் செய்வோம் என்று மிகப் பழமையான ஒரு மரத்திற்கு மறுநடவு செய்து உயிரூட்டிய சம்பவம் நம்ம திருச்செங்கோட்டில் "நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை" நண்பர்களால் சாத்தியமாகியுள்ளது.

ஒரு மணிநேர வேலை அல்ல இது, கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்களை கொண்ட அமைப்பு அத்தனை பேரும் ஒரே இடத்தில் ஒரு நாள் முழுவதும் இரவு பகல் பாராமல், சுட்டெரிக்கும் வெயிலையும் பாராமல்,  தன்னை வருத்தி அந்த மரத்தை மறு நடவு செய்திருக்கிறார்கள். அன்றோடு அழியப்போன மரத்தை இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வழி செய்துள்ளார்கள். இது சமூக சேவை மட்டுமல்ல, சமூக கடமையாக இவ்வளவு பெரிய பணியை செய்திருப்பது பாராட்டிற்குறியது.
 
இன்று மட்டுமல்ல பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் சமூகப் பணி பெரும் பேசு பொருளாக இருந்தது குறிப்பிடதக்கது.
 

1.) ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மரம் வளர்க்கும் திட்டம், 


 

2.)நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையின் இரத்த வங்கி திட்டம்(2000க்கும் மேற்பட்ட இரத்த தேவையை பூர்த்தி செய்துள்ளார்கள்)


 

3.) நீர் நிலைகளை பாதுகாப்பது மற்றும் கட்டமைப்பு திட்டம்,


 

4.) கொரோனா சமயத்தில் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக உணவில்லாமல் வாடியவருக்கு இலவச உணவு வழங்குதல் திட்டம் இன்னும் பல சமூக கடமைகளை தன் சொந்த கடமையாக எடுத்து செய்துவரும் நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளையில் இந்த மரம் மறுநடவு திட்டமும் ஒன்று என்று கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி. 



 இயற்கையை உருவாக்க முடியவில்லை என்றாலும் அழிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். நம்முடைய அடுத்த தலை முறை சுவாசிக்க காற்றும், குடிக்க நீரும் இயற்கையின் வழி உருவாகட்டும். 

"வாழ்க நம் சமூகம்

வளர்க சமூகப்பணி" 

 

 

 

சனி, 24 ஜூன், 2023

ரஷ்யாவில் வெடித்தது உள்நாட்டுப்போர், ரஷ்யாவின் புதிய அதிபர் யார்? புதினின் நிலை என்ன?

ரஷ்யாவில் உள்நாட்டுப்போர்??? ரஷ்ய அதிபர் புதின் நிலை என்ன???

கடந்த பல மாதங்களாக ரஷ்யா - உக்ரைன் போர் உலக அளவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ரஷ்ய கோரிக்கைகளை உக்ரைன் ஏற்கும் வரை உக்ரைன் மீதான போர் தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்திருந்தார். உக்ரைனில் நிலவிவந்த போர்பதற்றம் இன்று குறையவில்லை. இந்த போரில் உக்ரைன் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது. உக்ரைன் மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆனாலும் உக்ரைனுக்கு உலக அளவில் பல நாடுகளின் ஆதரவு கிடத்ததால் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வந்தது உக்ரைன் ராணுவம். இந்த நிலையில் ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் வெடித்துள்ளது உலக அளவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எப்படி உள்நாட்டுப்போர் உருவானது? அதற்கான காரணம் என்ன?

உக்ரைனுக்கு எதிராக போர்தொடுக்க ரஷ்யாவிற்கு அரசு ராணுவம் மட்டுமல்லாமல் வாக்னர்   என்ற உள்நாட்டு தனியார் ராணுவ நிறுவனத்தின் படைகளும் உதவி வந்தது. ஆனால் தற்போது அந்த வாக்னர் ஆயுதப்படை ரஷ்ய ராணுவத்திற்கும், ரஷ்ய அதிபரின் செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

வாக்னர் ஆயுதப்படை தாக்குதலின் நோக்கம் வெளிப்படையாக தெரியவில்லை எனினும் "வாக்னர் படை மீதான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்துவோம் என்றும் ரஷ்யாவின் புதிய அதிபர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றும் வாக்னர் ஆயுதப்படை தலைவர் பிரிகோஸின் தெரிவித்திருப்பது உலக அளவில் ரஷ்ய ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் வாக்னர் ஆயுதப்படை ரஷ்யாவின் தெற்கு பகுதி ராணுவ முகாம்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.

வாக்னர்  மற்றும் ரஷ்ய ராணுவப்படையும் தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி கொண்டிருப்பது ரஷ்ய மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

"அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்" என்று ரஷ்ய உள்நாட்டுப்போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக வாக்னர் ஆயுதப்படை தாக்கியுள்ளதா? இந்த தாக்குதலால் ரஷ்ய மக்களின் நிலை என்னவாகப்போகிறது? இதற்கு எல்லாம் விடை அதிகாரவர்கத்தின் முடிவில் உள்ளது. ராணுவ தாக்குதல், உள்நாட்டுப்போர், அரசியல் சண்டை இதற்கிடையில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை.

மக்களின் தேவைக்காக உருவானது அரசியல், மக்களை காக்க உருவானது தான் ராணுவம் ஆனால் தவறான அரசியலின் நோக்கத்திற்கு ராணுவத்தை உபயோகித்து மக்களின் வாழ்க்கை நிலையை நிம்மதியில்லாமல் செய்வது தான் அதிகார வர்க்கம் மற்றும் அதிகார ஆசை. ஒரு மனிதனின் தனிப்பட்ட ஆசைக்காக ஒட்டுமொத்த நாட்டின் நிம்மதியையும் கெடுப்பது ஒரு சிறந்த தலைமையாக நிச்சயம் இருக்காது.

சனி, 17 ஜூன், 2023

விஜய்யின் அரசியல் பயணம் ஆரம்பம்??


 நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட சமுதாய பொறுப்பு அரசியலுக்கான அடித்தளமா???

       இந்திய அளவில் மாபெரும் ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் முக்கிய நடிகர் விஜய்யும் ஒருவர்.  விஜய்யின் இன்றைய சமுதாயப்பணி எதிர்கால அரசியலுக்கு அடித்தளமாக அமையுமா?? என்று அரசியல் வல்லுனர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் விஜய் தவிர அவரை சார்ந்த அனைவரும் சமூக வலைதளங்களில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அவருடைய தந்தை இயக்குநர் SAC அவர்கள் ஓரிரு ஆண்டுக்கு முன்பு அதிகாரபூர்வமாக விஜயின் அரசியல் பயணத்தை தெரிவித்து அதை திரும்பப்பெற்றார். ஆனால் இதுவரை விஜய் அரசியலுக்கு வருவேன் என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அவருடைய படங்களில் அரசியல் நோக்கம் குறித்த தனது எண்ணங்களை வெளிபடுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் எதிர்கால நோக்கம் பற்றி வெளிப்பட கலந்தாலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றம் சார்பாக சில பல சமுதாய நற்செயல்களும், உதவிகளும் செய்யப்பட்டு வருகிற நிலையில் இன்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் விஜய் நேரடியாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்

தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு மேடையிலும் தன்னுடைய அரசியல் நோக்கம் பற்றிய ஒரு சில வார்த்தைகள் பற்றி பேசுவது அவருடைய வழக்கம் அதே போல் இன்றைய மாணவ மாணவிகளுக்கான பரிசு வழங்கும் விழாவில் "வாக்கு செலுத்த பணம் பெறுவதை ஊக்குவிக்கக் கூடாது" இன்றைய மாணவ மாணவிகள் எதிர்கால வாக்காளர்கள் என்றும் வாக்கு செலுத்த பணம் வாங்குவதை ஊக்குவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற சமுதாய பணி அவருடைய எதிர்கால அரசியலுக்கான அடித்தளமாக இருக்கும் பட்சத்தில் எதிர்கால அரசியலில் விஜயின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமா?.

பல நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வந்தாலும் வெற்றி பெற்றவர்கள் என்னவோ ஒரு சிலர்தான். அப்படிபட்ட சூழலில் நடிகர் விஜயின் அரசியல் பயணம் வெற்றி காணுமா? அல்லது மற்றவர்கள் போல இவருடைய அரசியல் பயணம் காணாமல் போகுமா? என்று எதிர்கால வாக்காளர்களின் கையில் உள்ளது.

நாளைய அரசியலுக்கு இன்றைய சமுதாயப்பணி தான் உதவும் என்ற எண்ணம் கைகூடுமா? 

இன்றைய பரிசு வழங்கும் விழாவில் விஜய் அவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும் என்று மாணவி ஒருவர் வெளிப்படையாக மேடையில் கேட்டுக்கொண்டுள்ளார் அதற்கு விஜயின் மௌனம் சம்மதத்திற்கான அறிகுறியாக இருக்குமா?

இன்றைய சமுதாயப்பணி அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் ஒரு தனிக்கட்சி தொடங்க தொடக்கம் தான் என்று விஜய் ரசிகர்கள் சிலரின் சுமூக வலைதள பதிவுகளால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

யார் அரசியலுக்கு வந்தாலும் அடிமட்ட மக்களின் தேவை அரசியல் தலைவர்களுக்கு தெரியாமலே போகிறது காரணம் இடைமட்ட அரசியல் வாதிகள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவதையும் தாண்டி அரசியலில் சேர்ந்தால் சமுதாயத்தில் உயர்ந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வருபவர்களால் தான் மக்கள் தேவை தலைவர்களுக்கு தெரியாமலே போகிறது. அப்படிபட்ட இன்றைய அரசியலுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைப்பார் என்றால் அவரை நாளைய வாக்காளர்கள் தலைவராக நிச்சயம் ஏற்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

வெள்ளி, 16 ஜூன், 2023

மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வைத்துள்ள புகார் உண்மையா? விசாரணைக்குப்பின் பல முக்கியப்புள்ளிகளின் பெயர்களும் வெளியிடப்படுமா?

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்???" - சிலப்பதிகாரம்...

கடந்த 13/06/2023 அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம்,  அலுவலகங்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத்துறை 15மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் கணக்கில் வராத சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அமலாக்கத்துறை. அதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முற்பட்ட போது திடீரென நெஞ்சுவலி காரணமாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது அமலாக்கத்துறை. தீவிர சிகிச்சைக்குப் பின் அமைச்சர் செந்தில் பாலாஜி இதய இரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகவும் அதற்காக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ய காரணமாக அவரது வங்கிக் கணக்கில் 1 கோடியே 34 லட்சமும், அவரது மனைவி வங்கி கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் இருப்பதாகவும் இந்த பணம் வருமானவரிக்கு தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுக்கு கூடுதலாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை சார்பாக நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்கள். அதனால் செந்தில் பாலாஜி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜியை 8 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கப்பட்டதால் நேற்று இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரண்டு நாளில் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் பொறுப்பு இலாக்காவான மின் துறையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது சார்பாக ஆளுநர் அவர்களுக்கு பரிந்துரையை தமிழக அரசு அனுப்பியிருந்தது.

அத்துடன் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடரவும் பரிந்துரை அனுப்பியது. ஆனால் ஆளுநர் சார்பில் இலாக்கா பிரித்து கொடுக்க அனுப்பிய பரிந்துரையை ஏற்ற அளுநர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர தமிழக அரசு செய்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். அதனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் என அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

1.)15 மணி நேர சோதனையின் போது அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தியதாகவும், அவரை வலுகட்டாயமாக இழுத்து செல்ல முற்பட்டதாகவும் அமைச்சர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2.)செந்தில் பாலாஜி மீதான குற்றங்கள் நிரூபிக்கபாடுமா? அமலாக்கத்துறை காவலில் வைத்து 8 நாள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓரிரண்டு நாளில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பட்டுகள் நடைபெறும் நிலையில் விசாரணை நடக்குமா? செந்தில் பாலாஜி மீதான குற்றம் நிரூபிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

3.)அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய ஏற்பாடு செய்திருப்பது விசாரனையிலிருந்து தப்பிக்க நாடகம் ஆடுவதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

4.) தமிழகம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கட்சி மாறி வந்தவுடன் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்து இன்று இவ்வளவு பிரச்சனைக்கும் திமுக பக்கபலமாக இருப்பது ஏன் என்ற கேள்வி பரம்பரை பரம்பரையாக திமுகவில் இருந்துவரும் ஒரு சில முக்கியப்புள்ளிகளுக்கு எழுந்துள்ளது.

5.)எதிர்கட்சி தலைவர் EPS அவர்கள் செந்தில் பாலாஜி இப்போது மாட்டிக்கொண்டதால் அவரை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் ஒட்டுமொத்த திமுக முக்கிய புள்ளிகளின் தலை உருளும் என்று எச்சரித்துள்ளார்.

6.)நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த அமலாக்கத்துறையின் செயல்பாடு அரசியல் நாடகம் என திமுக குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பாஜக தலைவர்களையும் பாரத பிரதமர் மோடி அவர்களையும் எச்சரிக்கும் விதமாக சவால் விடுத்துள்ளார்.

7.) பல நாட்களுக்கும் முன்பே பாஜக மாநில தலைலர் அண்ணாமலை மற்றும் சவுக்கு சங்கர் அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து எச்சரித்தும் அதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டது தான் இன்றைய  நிலைக்கு காரணம் என்று பல அரசியல் வல்லுநரகள் கூறுகின்றனர்.

8.) மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அவர்களுக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோதனைக்குப் பின் கிடைத்துள்ள சில ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

9.)செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரிக்கும் பட்சத்தில் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் எனவும், அதனால் சில முக்கிய புள்ளிகளின் பெயர் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் நாடகங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம் இன்று நடப்பது நாடகமா அல்லது உண்மையா என்று புரியாமல் இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் முட்டாள்களே!!! புரிந்தவன் புத்திசாலி ஆனால் அதனால் ஒன்றும் மாறப்போவதில்லை.!!!

 

புதன், 14 ஜூன், 2023

மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது???



மாண்புமிகு  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது???

இன்று காலையில் எழுந்தவுடன் செய்திகளில் மற்றும் சமூக ஊடகங்களில்  பரபரப்பு தொற்றிக்கொண்டிருப்பதை அனைவரும் அறிந்திருப்பர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணைக்கை அழைத்துச் செல்லும் போது திடீர் நெஞ்சுவலியால் துடித்து போனார் அதனால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அவருடைய உடல்நிலை சரியான உடன் அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கண்டறியபட்ட விவரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. 

அமலாக்கத்துறை சோதனையின் பிண்ணனி என்ன?
செந்தில்பாலாஜி 1994 ஆம் ஆண்டில் அரசியலில் அடியெடுத்து வைத்து மதிமுக, திமுக, அதிமுக, தினகரன் அணி மற்றும் திமுக என்று சில கட்சித்தாவல்களை கடந்து இன்று திமுக சார்பில் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

கரூரை பூர்வீகமாக கொண்ட செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் முக்கிய பகுதியான கோவை மாவட்டம் உட்பல சில பகுதிகளில் இன்று திமுக வின் கை ஓங்கி நிற்க முக்கிய காரணமாக திகழ்பவர். சிறப்பாக அரசியல் செய்யக்கூடியவர் தனக்கென ஒரு எதிர்கால குறுக்கோள் கொண்டு அரசியல் செய்பவர் செந்தில் பாலாஜி. கடந்த சில ஆண்டுகளில் பாஜக மாநில தலைவரான திரு.அண்ணாமலையோடு அரசியல் போர் நடைபெற்று வந்தது. திரு. அண்ணாமலை அவர்கள் செந்தில் பாலாஜி மீதும், திமுகவின் முக்கிய புள்ளிகள் மீதும் அதிகபடியான சொத்துகுவிப்பு புகாரையும் முன்வைத்தார். இன்று நடைபெற்றுள்ள அமலாக்கத்துறை சோதனை அண்ணாமலையின் குற்றிச்சாட்டின் பின்னணியா? அல்லது அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கொடுக்கப்பட்ட வழக்கின் பின்னணியா? என்று அமலாக்கத்துறை விசாரணைக்குபின் தான் தெரியும்.

 
நேற்று (13.06.2023) காலையில் ஆரம்பித்த அமலாக்கத்துறை சோதனையின் போது முழு ஒத்துழைப்பும் தருவேன் என்று உறுதியளித்தார் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி. அடுத்த 15 மணி நேர சோதனைக்குப் பின் கைபற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விவரங்கள் பற்றிய விசாரணைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட போது மாண்புமிக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி வந்தது. அதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துளார்கள். திமுக மற்றும் தமிழக முதல்வர் உள்பட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் மாண்புமிகு அமைச்சரின் உடன் பக்கபலமாக மருத்துவமனையிலே காத்திருக்கிறார்கள்.

திடீர் சோதனையா?
1.)அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டதா? இந்த சோதனைக்குப் பிண்ணனியில் பாஜக யின் அரசியல் பலிவாங்குதல் நடவடைக்கையாக இருக்குமோ?
2.)பல ஆண்டுகளாக மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சொத்துகுவிப்பு, மணல் கொள்ளை, மதுபான விற்பனை விலை மோசடி என்று பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் மீது இந்த நடவடிக்கையா?
3.)முதல்வர் உட்பட சில முக்கிய திமுக தலைவர்கள் மீது திரு.அண்ணாமலை சுமத்திய சொத்துகுவிப்பு புகாரின் பிண்ணனியா?
4.)திடீரென மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்க காரணம் என்ன?
5.)இந்த சோதனை அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் திமுக மீது அவப்பெயரை சுமத்த நிகழ்த்தப்பட்டதா?
6.) மாண்புமிகு அமைச்சர் மட்டுமல்ல சில அதிமுக முன்னால் அமைச்சர்கள் மீதும் அதிக சொத்து குவிப்பு வழக்கு நடைபெற்று கொண்டிருக்க அடுத்தடுத்து சில பல முக்கிய புள்ளிகள் மீது சோதனை நடத்தப்படுமா?

இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அமலாக்கத்துறையினரிடமே உள்ளது.

இன்றைய தமிழக அரசியலில் மத்திய அரசின் முக்கிய தலையீடல் இது என்று அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட அனைத்து பாஜக வின் எதிர் தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை என்று கருதியவர்கள் அரசியலை விட்டு விலகி நிற்கிறார்கள். அந்த அரசியலே ஒவ்வொரு குடிமக்களை வைத்துதான் நடக்கிறது மக்கள் இல்லை என்றால் ஏது அரசியல்? இதை உணர்ந்தால் அரசியல் நம் அன்றாட வாழ்வின் முக்கியதுவம் என்பது புரியும். அரசியலின் ஆதாயமான குடிமக்களாகிய உங்களின் கருத்து என்ன? என்பதை உங்கள் சுதந்திர கருத்தாக இந்த அமலாக்கத்துறை சோதனை மற்றும் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பற்றி குறிப்பிடுங்கள்.

உலக கோப்பையில் இந்தியா தோல்வி குறித்து தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் "X" தளத்தில் ஆதங்கம்

2023 கிரிக்கெட் உலக கோப்பை நம் இந்தியாவில் நடந்து முடிந்தது . இந்தியா , பாகிஸ்தான் உள்பட மொத்தம் 10 அணிகள் 2023 உலக கோப்பையை வெல்ல...